Friday, 13 December 2019

இறையருள்!

படித்ததில் உருக்கிய பகிர்வு!



அவள் எங்கே இருக்கிறாள்?

மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது.

பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.
''மனதில் பெரிய கேள்வியை வைத்துக்கொண்டு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய்?''
திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பக்கத்து இருக்கைக்காரி பச்சை புடவைகாரியாக மாறியிருந்தாள்.

''உன் கண்களுக்கு மட்டும்தான் தெரிவேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.''

''தாயே மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கடையூரில் அபிராமியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் விரும்பி உறையும் இடம் என்ன?''

''முட்டாளே! நான் மதுரையிலும், காஞ்சியிலும், காசியிலும் இல்லை. மதுரை, காஞ்சி, காசி இவை எல்லாம் தான் என்னுள் இருக்கின்றன. நான் உலகத்தில் இல்லை. இந்த உலகம் தான் என்னுள் இருக்கிறது.''

''தாயே தத்துவம் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இடம்?''
''வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவியடா நான்.''

''மீண்டும் தத்துவமா? பிடித்த இடம் என்னவென்று சொல்வீர்களா அதைவிட்டு விட்டு..''

''அங்கே நடக்கும் காட்சியைப் பார்''

இடம் மும்பை.
ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள்.

''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''

''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''

''சொல்லும்மா.''
''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்க இல்லையா?''
''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.''
'அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''

திகைத்துப் போன அறுவை சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக்கொண்டார்.

மறுநாள் அதிகாலை.
அறுவை சிகிச்சை தொடங்கியது. அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது.

இனிமேல் அந்தச் சிறுமி பிழைக்கமாட்டாள் என்று தோன்றியது... அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்தபின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!

அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!

கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார். பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.

''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.''

அவர் கண்களில் நீர்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.

''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.''

அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். அதன்பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக்கொள்கிறார்.

ஒவ்வொரு முறையும் தன் கல்வி, திறமை அனைத்தையும் இறைவனின் திருவடி சமர்ப்பணம் செய்துவிட்டுப் பதட்டமில்லாமல் சிகிச்சை செய்கிறார்.

'இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கும்' என்ற அறிவிப்பு வந்தது.

''இப்போது உனக்கே தெரியுமே, எனக்குப் பிடித்த இடம் எதுவென்று?''
''ஆம் தாயே. உங்கள் அன்பில் நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்கள்தான் சிறந்த திருக்கோவில்கள். 'என் செயலாவது யாதும் இல்லை. எல்லாம் அவள் செயல்' என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர்களின் திருக்கரங்களில் நீங்கள் ஜொலிக்கிறீர்கள்.

யாராவது அடுத்தவர்களுக்காக உருகிக் கண்ணீர் சிந்தினால் அந்த உப்புத் திரவத்தில் இந்த உமா மகேஸ்வரி இருப்பாள்.''

''இந்தப் பாடத்தை என்றும் மறவாதே!''

விமானம் தரையைத் தொடும் சமயத்தில் பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள்.

பகிர்வு

தர்ம சாஸ்திரம் கூறும் அருமையான ஆலோசனைகள்.

  1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

_தர்ம_சாஸ்திரம்

Monday, 9 December 2019

நல்லதையே பேசுங்க!

படித்ததில் பிடித்த கதை!


நல்லதையே_பேசுங்கள்...!

விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.

இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும்  நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.

இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது.  “ நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்? என்று கேட்டார்.  விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.

எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா.

அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு.  கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார். விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக்கூறினர்.

இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.

வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார்   இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது  போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.

உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை  ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா?  நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது என்றார் ஆதிசேஷன்.

Monday, 2 December 2019

சுவையான ஒரு கதை!

*ஒரு குட்டி கதை*

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

 ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

 நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.

 நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

 “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.

 அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து

உலகம் புகழும்
பெனிசிலின்
கண்டுபிடித்த
 *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்* ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது

 பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

 நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
வாழ்க்கையில்

*பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்*

*யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்*

*யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு*

*யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு*

*சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்*

இறுதியாக இதோ ஒரு சின்ன ஐரிஷ் வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும்:

*உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்*

*உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்*

*உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்*

*ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்*

*எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்*

*இயற்கையும் இறைவனும் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்*


Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...