Friday, 25 October 2019

திருப்பதி அற்புதம்!

படித்ததில் பிடித்தது!

ஒருமுறை ஹைதராபாத்திலிருந்து வந்த ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருப்பதிக்கு வந்து ஏழு மலைகளையும் நடந்தே கடந்து சென்று திருமலையை அடைந்தார். அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கவே அதைக் கேட்ட அர்ச்சகர்கள் திடுக்கிட்டு ஆச்சர்யமுற்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் அவரை அழைத்துச் சென்றனர். அவர்கள் தேவஸ்தான செயல் அலுவலரிடம் (E.O) அனுப்பி வைத்தனர். அவரை சந்தித்தவர், “ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரைச் சேர்ந்த சிறிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்தவித தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம், மங்களா சாசனம் ஆகியவற்றையும் பாடுவோம். “எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம் என்பது இறைவனின் திருநாமத்தைப் போற்றிக் கூறும் 108 முறை போற்றுவது). இதுதவிர, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம். 

இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்ற சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான 108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால், எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் சில பூக்களை மட்டும்தான் என் கொள்ளுத் தாத்தாவால் சேர்க்க முடிந்தது. அவருக்கு பிறகு என் தாத்தா சிறிதளவு பூக்களைச் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிதளவு பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறேன்” என்று கூற, அச்சரியத்துடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்தான செயல் அலுவலர், “என்ன, நீங்கள் 108 தங்கப் பூக்களைச் சேர்த்துவிட்டீர்களா?'' என்றார்.

“ஆம்!” என்ற ஷேக் மஸ்தான்,  “ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் பூக்களைச் சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட ஒரு பூவும் மூன்று சவரன். 108 பூக்களின் மொத்த எடை சுமாராக இரண்டரை கிலோ)
“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் சேவையின்போதோ பயன்படுத்தவேண்டும் என்பதே. எங்கள் கோரிக்கையைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டால், எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் எங்கள் தாத்தாவின் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும். இதுதான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தார்.
சற்று நேர அமைதிக்குப்பின் செயல் அலுவலர், “எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள் கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். வெங்கடேசப் பெருமாள் சேவையில் பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தார். அதன்படியே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணி அளவில், திருமலையில் அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.

1984-ல் திருமலையில் ஏழுமலையான் சந்நிதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இன்றளவும் நடக்கிறது.
திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை, காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்தி வந்த ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அந்த ஏழுமலையான் ரட்சித்து வருகிறான் என்பதையும் பறைசாற்றுகிறது.

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...